திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் (மயிலாடுதுறை) Parimala Ranganatha Perumal Temple in Tamil
திருமாலுக்கு காவிரிக்கரையின் மீது அவ்வளவு இஷ்டம் போலும். சோழ நாட்டில் தான் நிறைய இடங்களில் பகவான் தன் லீலா வினோதங்களை காட்டியிருக்கிறார் இந்தியாவிலுள்ள யாத்திரீகர்கள் எல்லோரும் சோழ நாட்டிற்கு வர வேண்டும், தன்னைத் தரிசிக்க வேண்டும் என்பதில் பகவான் மிகுந்த விருப்பப்படிருக்கலாம். அதற்கு அடையாளம்தான் திருஇந்தளூரில் குடிகொண்டிருக்கும் பரிமள ரங்கநாதன் திருக்கோயில்.
மாயவரம் அல்லது மயிலாடுதுறையின் நகரின் நடு புறத்திலே மையமாகக் கொண்டு விளங்கும் இந்த திரு இந்தளூர் கோயிலின் மூலவர் பரிமள ரங்கநாதன். இவருக்கு இன்னொரு பெயர் மருவினிய மைந்தன். என்ற அழகான திருப்பெயர். உற்சவர் சுகந்தவ நாதன். கிழக்கே பார்த்த தரிசனம். விமானம் வேத சக்ர விமானம். தீர்த்தம் இந்து புஷ்கரிணி. சந்திரனுக்குப் பல முறை நேரடியாக தரிசனம் கொடுத்த ஸதலம். இந்த பெருமாளைப் பற்றி 11 பாசுரங்கள் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார்.
கங்கைக்கும் காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுத்த வரலாறு இங்கு தான் நடந்திருக்கிறது. பகவான் தலைமாட்டில் காவிரி தாயாரும் கால் பக்கத்தில் கங்கை அமர்ந்திருக்கின்ற காட்சி, மிகவும் அற்புதமானது, வேறெங்கும் காண முடியாதது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்தக் கோயிலில் விழாக்கோலம் தான். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல பாகங்களில் இருந்து யாத்திரீகர்கள் வந்து குவிவார்கள். காவிரி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் 'கடைமுக ஸ்நானம்' நடைபெறும். இது மிகவும் புனிதமான ஸநானம் என்பதால் இந்த ஸதலம் வரலாற்றுச் சிறப்பு உடையது. பகவான் சயனத் திருக்கோலத்தில் சதுர்புஜத்தில் தரிசனம் கொடுக்கிறார்.
சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவவிமோசனம் கிடைத்தாலும் சந்திரன் திருப்தி அடையவில்லை. இம்மியளவு கூட தன் மீது எந்த சாபமும் ஒட்டி இருக்கக் கூடாது என்பது சந்திரன் கண்ணும் கருத்துமாக கொண்டு, பெருமாளிடம் தன் குறையைச் சொல்வதைவிட தாயாரிடம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் என்றெண்ணி தாயாரான புண்டரீகவல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை அவர் மீதிருந்த பாவத்தை அப்படியே போக்கியதாக சொல்கிறார்கள். இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசந வல்லி என்று பெயர் உண்டு.
பரிகாரம்
மற்ற தளங்களுக்கு சென்று பாவம் தீர வில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாவம். தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் விலக்கிக்கொள்ள முடியும். தெரிந்தோ தெரியாமலோ பஞ்சமா பாதகங்கள் செய்திருந்தால் அதையும் இங்கு வந்து போக்கிக் கொள்ளலாம். பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்களின் சாபத்திற்கு ஆளானவர்கள் பெண் வாரிசு பிறக்கவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தார் அவர்களது அனைத்து குறைகளும் விலகிவிடும்.