திருகண்டம் (கடிநகர் தேவப்பரயாகை)
இமயமலையில் தேவர்கள் வசிக்கிறார்கள். தெய்வங்கள் தங்கி அருள்பாலித்து வருகின்றன என்பதை உண்மையாக்கும் பொருட்டு அங்கு செல்லும் வழியில் சில அற்புதமான திருக்கோவில்களும் இருக்கின்றன. குறிப்பாக ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல புகழ் பெற்ற கோயில்களும் உண்டு. சித்தர்களும் ஞானிகளும் முனிவர்களும் இன்றைக்கும் அங்கு வாசம் செய்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. அதில் ஒன்றுதான் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் தேவப்பிரயாகை.
ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத்துக்கு செல்லும் வழியில் 45 மைல் தொலைவில்(72 கிலோமீட்டர்) உள்ளது தேவப்ரயாகை. ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 96 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தேவப்பிரயாகை. சமுத்திர மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த அருமையான இடம் இது. மூலவர் நீலமேகப் பெருமாள். புருஷோத்தமன் என்ற பெயரும் உண்டு. நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தாயா புண்டரீக வல்லி. தீர்த்தம் கங்கை மங்கள தீர்த்தம் விமானம் மங்கள விமானம். பரத்வாஜ முனிவர் திருமால் தரிசனம் கொடுத்த இடம்.
பிரம்மதேவர் தசரத மகாராஜா ஸ்ரீராமன் ஆகியோர் தவம் செய்த இடம். இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ரகுநாத மூர்த்தியை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார். இந்தக் கோயிலுக்கு அருகில் பத்ரிநாத், காலபைரவர், மகாதேவர், அனுமார் ஆகியோரின் மூர்த்திகள் உள்ளது.
இந்த இடத்தில்தான் அலகாநந்தாவும். பாகீரதியும் சங்கமம் ஆகின்றது. இது கண் கொள்ளா காட்சி. ஆதி கங்கையாக போற்றப்படுகின்ற மிக அருமையான புண்ணிய ஸ்தலம். நதிகளில் இறைவன் இருக்கிறார் என்பதை மெய்ப்பிக்க ப்படும் விசேஷத்தை இங்கு காணலாம்.
இந்த புண்ணிய நதிகள் சங்கமமாகும் இடத்தில் நீராடி புருஷோத்தப் பெருமாளை தரிசித்தவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். மகான்களுக்கும் முனிவர்களுக்கும் இறைவன் முக்தியை கொடுத்த ஸ்தலம். இன்றைக்கும் திருமாலின் புள்ள இயற்கையில் கலந்து ஆசீர்வதிக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதால் பகவானைத் தேடி வரும் பக்தர்கள் அதிகம்.
பரிகாரம்
எப்படியாவது நாம் வாழ்க்கையில் முக்தி அடைந்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள். இந்த தேவப் பிரயாகைக்கு கால் எடுத்து வைத்தால் போதும். முன் ஜென்ம பாவம் கழிவதோடு பெருமாளின் கடாட்சமும் கிடைத்துவிடும். கவலை, பயம், விரக்தி போன்றவை விலகும். கஷ்டங்கள் தொலையும். வியாதிகள் விலகும். புண்ணியவான்கள் ஆக மாறி புகழ் எய்துவார்கள்.