திருக்கடித்தானம் பெருமாள் கோயில் Thrikodithanam Temple in Tamil
தேவர்கள் மிகவும் புண்ணியவான்கள் என்று நாம் நம்புகிறோம். தேவர்களுக்கு எப்படி புண்ணியம் கிடைத்தது? அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. ஆனால் கேரளாவில் உள்ள திருக்கடித்தானம் என்னும் ஊரில் குடி கொண்டிருக்கும் அற்புத நாராயணன் கோவில் வரலாற்றைப் படிக்கும் பொழுது, நேரடியாக அங்கு சென்று பகவானை தரிசிக்கும் போது ' அடடா இப்படி ஒரு ஸ்தலத்தை முன்பே நாம் தரிசித்து இருந்தால் எப்போதோ நாம் தேவராக மாறி புண்ணிய லோகத்தை அடைந்து இருப்போமே' என்ற ஆதங்கம் ஏற்படும்.
திருவல்லாவிலிருந்து கோட்டையம் செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் செங்கணச்சேரி வரும். இங்கிருந்து ஒரு கிளைப் பாதை வழியாகச் சென்றால் திருக்கடித்தான கோயிலுக்கு சென்று விடலாம். மூலவர் அற்புத நாராயணன் (அம்ருத நாராயணன்). நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக தாண்டவம், தாயார் கற்பகவல்லி. தீர்த்தம் பூமி தீர்த்தம். விமானம் புண்ணியகோடி விமானம். ருக்மாங்கதன் என்ற பக்தருக்கு பகவான் நேரடியாக தரிசனம் தந்து முக்தியை கொடுத்தார்.
நரசிம்மன் சன்னதியும், கிருஷ்ணர் சன்னதியும் இருக்கின்றன. ருக்மாங்கதன் என்பவன் சூரிய தேசத்து அரசன். இங்குள்ள பெருமாள் கோவிலில் பெரும்பாலும் பக்தியோடு பொழுதைக் கழித்தான். ஏகாதசி தோறும் விரதம் இருந்தான். இதனால் ருக்மாங்கதனுக்கு தெய்வ யோகம் கிடைத்தது. ருக்மாங்கதனைப் போலவே மற்றவர்களும் ஏகாதேசி விரதமிருந்து இங்குள்ள பெருமாளை பிரார்த்தனை செய்தால் அவர்கள் அனைவருக்கும் தேவலோக பதவி கிடைக்கும் என்கிறது கோயில் வரலாறு. இந்த சன்னதியை பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் பிரதிஷ்டை செய்தார். நம்மாழ்வார் இந்தக் கோயிலைப் பற்றி மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரிகாரம்
வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறவர்கள், பதவி கிடைக்காமல் அலைகிறவர்கள், வெகுநாட்களாக பாடுபடும் பதவியில் முன்னேற்றம் பெறாமல் துடிக்கிறார்கள், புண்ணியம் நிறைய செய்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆகியோர் அனைவரும் திருக்கடித்தானம் அற்புத நாராயணனின் கோயிலுக்குள் காலடி வைத்தால் போதும். கவலை எல்லாம் விலகும். நினைத்த காரியத்தை உடனே முடித்துவிடும் பாக்கியம் கிடைக்கும்.