திருச்சித்ர கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் Govindaraja Perumal Temple in Tamil
கடலூரில் இருந்து தெற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த சிதம்பரம் நகருக்கு மறுபெயர்தான் திருச்சித்ரகூடம். தென்புலியூர், தில்லைவனம், கோவில், பெரும் பற்ற புலியூர், புலிச்சரம், திருச்சிற்றம்பலம் என்று பல பெயர்கள் இதற்கு உண்டு. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய கோயிலைப் பற்றி பல வியக்கத்தக்க புராணக் கதைகள் உண்டு. புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்குள், இந்த வைணவக் கோயில் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது.
மூலவர் கோவிந்தராஜ பெருமாள், கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் தேவாதித் தேவன். தாயார் புண்டரீக வல்லி. தீர்த்தம் புண்டரீக தீர்த்தம். கோடி நாட்டு திருப்பதிகளில் 23 ஆவது இடத்தை பெற்றது. குலசேகர ஆழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்து இருக்கிறார்கள். விமானம் ஸாத்வீக விமானம்.
நடராஜ பெருமானும், இந்திராதி தேவர்கள் 3000 பெயர்களும் இங்குள்ள கோவிந்தராஜ பெருமாளை தரிசிக்க வந்ததாக ஒரு வரலாறு. தன்னெதிரே நடனமாடிய நடராஜப் பெருமானது தாண்டவத்தைக் கண்டு பெருமாள் மெய்மறந்து இங்கேயே தங்கியதாகவும் சொல்வதுண்டு. பரதமாமுனிவர் நாட்டிய சாஸ்திரத்தை ஏற்படுத்திய ஸ்தலம். சிவன், தானே விரும்பி அமர்ந்து ஆனந்த தாண்டவம் செய்தார். உலகிலுள்ள எல்லாவிதமான நடனங்களையும் இங்குள்ள சிற்ப சாஸ்திரத்தில் காணலாம். பாணினி முனிவர் வியாகரணம் செய்த இடம். பதஞ்சலி முனிவருக்கும் பாணினி, தில்லை 3000 பேர்களுக்கும் பகவான் நேரடியாக தரிசனம் காட்டிய இடம்.
பரிகாரம்
கலைத்துறையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்பவர்கள் வியாபாரம் சீர்குலையாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், அலுவலகத்தில் ஏதாவது சாதனை செய்து விரைவில் உலகளாவிய வகையில் பெரும் புகழ் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், இங்கு வந்து கோவிந்தராஜப் பெருமாளை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் போதும். அவர்கள் பலவகையில், புகழோடும் எதிர்காலத்தில் சிறப்பாக விளங்குவார்கள்.