திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் Ulagalanda Perumal Temple in Tamil
திருமாலின் தெய்வத் திருத்தலங்களில் இன்றைக்கு கண்ணுக்குத் தெரிந்து முக்கியமான பல கோயில்களின் வரலாறுகள் மறைந்தே போயிற்று. இருக்கின்ற சில கோயில்களும் தகுந்த பராமரிப்பு இன்றி அழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. அப்படி சரியான வரலாறும் இல்லாத மிகவும் கீர்த்தி பெற்ற கோயில்களில், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் அருகே இருக்கும் 'திருநீரகம்' பெருமாள் கோயிலும் ஒன்று மிகப்பழமையான இந்தக் கோயிலில் சில அபூர்வமான நிகழ்ச்சிகளை திருமால் செய்து காட்டி இருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் இந்த பெருமாள். மூலவர் பெயர் ஸ்ரீ ஜகதீஸ்வர பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம். விமானம் ஜகதீஸ்வர விமானம். தாயார் நிலமங்கை வல்லி. கோயில் தீர்த்தம் அக்ரூர தீர்த்தம்.
கோயிலின் உண்மையான வரலாறு முழுமையாக தெரியவில்லை. மிகப்பெரிய ஞானியும் முனி வருமான ' அக்ருர' என்பவருக்கு முன்வினைப் பயன் காரணமாக தெய்வ சாபங்கள் இருந்தன. கங்கையில் முழுகியும் அந்தப் பாவங்கள் விலகவில்லை. கடைசியாக இந்த காஞ்சிபுரத்தில் தெற்கு நோக்கி கோயில் கொண்டிருக்கும் ஜகதீஸ்வரர் சன்னதிக்குச் சென்று தினமும் பிரார்த்தனை செய்தால் தோஷம் விலகும் என்று சொன்னதின் பேரில் அக்ரூர முனிவர் இங்கு வந்தார். அப்பொழுது அவர் இந்த கோயிலுக்கருகே தனக்கென்று ஒரு புஷ்கரணியைத் தோண்டி அதில் நீராடினார். ஜகதீஸ்வரப் பெருமாள் தம்பி அக்ரூர முனிவருக்கு காட்சி தந்து அவரது தெய்வ சாபங்களை போக்கினார். அன்று முதல் அந்த தீர்த்தம் அக்ரூர புஷ்கரணியாக மாறிற்று. திருமங்கையாழ்வார் இக்கோயிலைப் பற்றி பாசுரம் பாடி இருக்கிறார்.
பரிகாரம்
முன்னோர் செய்த தீவினைப் பயனாக அவர்தம் மூன்றாவது சந்ததிகள் பாதிக்கப்படுவார் என்பது உண்மை. பெரியோர்கள் செய்த தவற்றைப் போக்கவும் எதிர்கால சந்ததிகள் இதுபோன்ற சாபங்களால் திண்டாடமல் இருக்கவும் இடம் மாறி வாழ்க்கைச் செல்லாமல் இருக்கவும் நோய் நொடிகள் வராமல் காப்பாற்றவும், குழந்தைகளது ஆரோக்கியம் படிப்பு எந்த விதத்தில் பாதிக்காமல் இருக்கவும், இங்குவந்து மாமுனிவர் ஆக்ரூரா புஷ்கரணியில் நீராடி ஜெகதீஸ்வர பெருமாளை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் போதும். அனைத்து முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து விடும்.