திருப்புலியூர் (குட்டநாடு) பெருமாள் கோயில் Puliyur Temple in Tamil
பாவத்தை கழிப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. பகவானை நம்பி விட்டால் போதும். ஆனால் பகவானை நம்பாமல் பொன், பொருள் ஆகியவற்றை தானம் கொடுக்காவிட்டால் பாவம் கழியுமா? என்பதற்கான கேள்விக்கு பதில் கிடைக்கக்கூடிய புண்ணியத் தலங்களில் திருப்புலியூரும் ஒன்று. யார் யாருக்கு தானம் கொடுத்து விட முடியாது என்கின்ற உண்மையையும், எப்படி தானம் கொடுத்தாலும் அது வீண்தான் என்பதையும் அனுபவபூர்வமாக எடுத்துக்காட்டும் அருமையான ஸ்தலம் திருப்புலியூர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய ஊரான திருப்புலியூர் செங்கணூரில் இருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் மாயப்பிரான். நின்ற திருக்கோலத்தில் பகவான் அருள் பாலிக்கிறார். தாயார் பொற்கொடி நாச்சியார். தீர்த்தம் பரஜ்நாஸரஸ். பூஞ்சுனை தீர்த்தம். விமானம் புருஷோத்தம விமானம். ஸப்த ரிஷிகளுக்கு திருமால் நேரடியாக தரிசனம் கொடுத்த இடம்.
இந்தக் கோவில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சிபியின் குமாரன் வ்ருஷாதர்பி இங்கு அரசாண்ட பொழுது நிறைய பாவங்கள் ஏற்பட்டது. இந்தப் பாவத்தை தொலைக்க என்ன செய்யலாம் என்று அரசன் யோசித்தான். அப்பொழுது அங்கு சப்தரிஷிகள் வந்திருப்பதை அறிந்து அவர்களுக்கு தானம் செய்ய உத்தரவிட்டான்.
அரசனோ மகாபாவி, அவன் கையால் தானம் வாங்க கூடாது என்று சப்தரிஷிகள் முடிவு எடுத்து தானம் வாங்க மறுத்துவிட்டனர். இதை உணர்ந்த அரசன், தனது தானத்தைத் கலந்த பழங்களாக வேறு விதமாக அனுப்பினார். சப்த ரிஷிகளுக்கு இது ஞான திருஷ்டி மூலம் தெரிந்துவிட்டது. மீண்டும் மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட அரசன், ஒரு பெண் மூலம் சப்தரிஷிகளை கொல்ல முயற்சித்தான். இதனை உணர்ந்த சப்தரிஷிகள் திருமாலிடம் பிரார்த்தனை செய்ய, திருமால் அந்தக் கொடிய பெண்ணை கொன்று சப்தரிஷிகளை காப்பாற்றி சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக வரலாறு! நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இந்த கோவிலுக்கு மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்
நல்லவர்களாக இருப்பவர்களுக்கும், தெய்வ வளத்தைத் தவிர மற்ற பலம் எதுவும் இல்லாத சாமானியர்களுக்கும், கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். இந்த கட்டங்களை எப்போது, யாரால் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டு விட்டால் பகவானை தஞ்சம் அடைய வேண்டிய இடம் தான் இந்த திருப்புலியூர் மாயப்பிரான் திருக்கோயில். பகவான் நிச்சயம் அவர்களது துன்பங்களை போக்குவதோடு சொர்க்கத்திற்கும் இடம் கொடுத்து அருள்பாலிப்பார்.