திருமணி மாடக் கோயில் திருநாங்கூர் Thirumani Madak Koil in Tamil
திருமாலின் தரிசனத்தை அடுத்தடுத்து காணக்கூடிய வாய்ப்பு திருநாங்கூரில் இருக்கிறது. திருமால் தரிசனம் மட்டுமின்றி, கருட வாகனங்களையும் ஒன்று சேர்த்து பார்ப்பது என்பது கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூலோகத்தில் வைகுண்டத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் ஒரு முறை திருநாங்கூர் திருமணி மாடக் கோயிலுக்கு வந்து நாள் முழுவதும் தங்கி தரிசனம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
சீர்காழியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த திருமணிமாடக் கோயிலின் மூலவர் நாராயணன். நந்தாவிளக்கு என்றும் வேறு பெயர் உண்டு. வீற்றிருந்த திருக்கோலம் உற்சவர் நாராயணன். அளத்தற்கரியான் என்று மற்றுமொரு உற்சவரும் உண்டு தாயார் உண்டனர் புண்டாரீகவல்லித் தாயார், புருஷோத்தம நாயகி. தீர்த்தம் இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரணி விமானம் ப்ரணவ விமானம் என்ற பெயரும் உண்டு. இந்திரனுக்கும் ஏகாதச ருத்ரர்களுக்கும் பெருமாள் நேரிடை தரிசனம்.
இந்தக் கோயிலின் மிகப் பெரிய விசேஷம் என்பது தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடக்கும் பதினொரு கருட சேவைதான். இந்த கோயிலில் மட்டுமின்றி, திருநாங்கூரிலுள்ள மற்ற பெருமாள் கோவிலில் இருந்தும் பெருமாள்கள் கருட வாகனங்களில் ஒன்றாக வந்து இங்கு சேவை சாதிப்பார்கள். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் அவர்தம் தர்மபத்தினி குமுதவல்லி உடனும் அவர் ஆராதித்த பெருமகளுடனும் திருமாலின் சகதர்மினியான உபய நாச்சியாருடன் பல்லாக்கில் மேலேறி, 11 சித்திரங்களுக்கும் வயல் வழியாக இறங்கி, பயிரை மிதித்துக் கொண்டு, அங்கங்கே மங்களா சாசனம் செய்து கொண்டே, தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் நாராயண பெருமாள்(அருகில் உள்ளது) கோயில் வாசலில் வந்து சேர்வார். பிறகு அங்கு கருட வாகனத்தில் நிற்கும் 11 திவ்ய தேச பெருமாள் களையும் ஆழ்வார் பிரதட்சிணமாக வந்து மாலை மரியாதைகள் செய்து விட்டு பின்பு வீதி புறப்பாடு நடக்கும். பயிரை ஆழ்வார் மிதித்ததால் பயிர் நன்றாக வளரும் என்பது ஐதீகம்.
பரிகாரம்
ஒரு கருட வாகன தரிசனமே நமது அனைத்துப் பாவங்களையும் தீர்க்கும். 11 கருட சேவையை கண்டால் பத்து தலைமுறைக்கு நமக்கு பாவம் என்பது ஏற்படாது. குழந்தையில்லாத பாவம் கழிய, குறையுடைய குழந்தை இருந்தால் அந்த குறையை நீக்க செய்கின்ற பரிகாரம், நோயுற்ற கணவனோ - மனைவியோ இருந்தாள் - அவர்கள் முன் ஜென்ம பாவம் விலக, நோய் விலக, செய்யவேண்டிய பரிகாரம், ஏழ்மை நிலை மாற செய்ய வேண்டிய பிரார்த்தனை, கோர்ட் விவகாரத்திலிருந்து நல்லபடியாக வெளிவர செய்ய வேண்டிய பரிகாரம் - அத்தனையும் இதுவரை செய்யாதவர்கள் திருநாங்கூர் வந்து தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு நடக்கும் 11 கருட சேவையைக் கண்டு பெருமாளை தரிசனம் செய்தால் போதும், அவர் குறைகள் களையப்பட்டு விடும்.