திருவாறன் விளா திருக்குறளப்பன் பெருமாள் கோயில் Tirukuralappan Temple in Tamil
மகான்களாக இருந்தாலும் கடவுளின் அவதாரங்களாக இருந்தாலும், இந்த பூமியில் பிறந்து விட்டால் பாவத்தை செய்யாமல் இருக்க முடியாது என்பது தெரிந்த விஷயம். இருந்தாலும் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய முடியாமல் போனால் தான் அவர்கள் பாவத்திலும் பெரும் பாவத்திற்கு ஆளாகிறார்கள். அப்படியொரு நிலை வரக்கூடாது என்பதற்காக பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் மூலம் பகவான் நமக்கு பாவ விமோசனத்திற்கு வழி காட்டும் ஸ்தலம் தான் திருவாறன் விளை.
செங்கண்ணூரில் இருந்து கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன ஒரு புனிதமான ஸ்தலம் திருவாறன்விளை. மூலவர் திருக்குறளப்பன். நின்ற திருக்கோலம், தாயார் பத்மாஸனி நாச்சியார். தீர்த்தம் வேதவியாச ஸரஸ், பம்பா தீர்த்தம். விமானம் வாமன விமானம். பிரம்மாவுக்கும், வேதவியாசர் இருக்கும் திருமால் பிரத்யட்ச தரிசனம் கொடுத்த இடம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பாரத யுத்தத்தில் கர்ணன் போர் புரிந்து கொண்டிருக்கும் போது கர்ணனின் தேர் சக்கரம் பூமியில் இறங்கியது. கர்ணன் இதைக் கண்டு அர்ஜுனனிடம் தனது ரதத்தில் தூக்கி நிறுத்தும் வரை தன்னை கொல்ல வேண்டாம் என்று சொன்னார். ஆனாலும் அர்ஜுனன் இதை கேட்காமல் வஞ்சகமாக அம்பெய்தி கர்ணனை கொன்றான். தான் செய்த இந்த தவத்தால் மனம் நொந்து கொண்டிருந்த அர்ஜுனன். இப்படியொரு பாவத்திற்குப் பரிகாரம் இல்லையா என்று ஏங்கிக் கொண்டிருந்த போது திருவாறன்விளையில் வந்து தவம் செய்து திருமாலுக்கு கோவில் கட்டினால் போதும், பாவம் தொலையும் என்று சொன்னதின் பேரில் திருக்குறளப்பன் கோயிலைக் கட்டினான். இதனால் அவனது பாவமும் தொலைந்தது. பக்கத்தில் மதிலை தொட்டுக் கொண்டு அற்புதமாக பம்பா நதி ஓடுகிறது.
பிரம்மனிடமிருந்து வேதங்களை மதுகைடபர்கள் திருடிவிட்டார்கள். பிரம்மா உடனே திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்ய, திருமால் மதுகைடபர்களை தண்டித்து அவர்கள் எடுத்துச் சென்ற வேதங்களை மீண்டும் பிரம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்த புண்ணிய ஸ்தலம் இதுதான்.
இந்தத் ஸ்தலத்தில் தான் சபரிமலை ஐயப்ப சுவாமியின் ஆபரணங்கள் இன்றளவும் பத்திரமாக வைக்கப் பட்டு மகரஜோதியின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது என்பது மிகப்பெரிய சிறப்பம்சம்.
பரிகாரம்
செய்யாதே என்று சொல்லியும் அந்த பாவத்தை செய்கிறவர்களுக்கும், நயவஞ்சகமாக ஏமாற்றி செய்யக்கூடாத பஞ்சமா பாவங்களைச் செய்கிறவர்களுக்கும், ஏற்கனவே பல்வேறு பாவங்களை பேச்சால், செய்கையால் செய்தவர்களுக்கும், அவர்களது பாவங்கள் ஒட்டுமொத்தமாக கழியக்கூடிய அருமையான புண்ணியத் ஸ்தலம் இந்த திருவாறன்விளை பெருமாளின் பெருமை சொல்லில் அடங்காது.